செய்திகள்
நகை கொள்ளை

குடியாத்தத்தில் 2 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2021-09-18 08:27 GMT   |   Update On 2021-09-18 08:27 GMT
ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் 12 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த வினாயகாபுரம் எழில் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளராக உள்ளார். இவரது மனைவி பாரதி (வயது 40). இவர் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாரதியின் கழுத்திலிருந்த 9½ பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

செல்லப்பாண்டியன் வீட்டிற்கு சற்று அருகில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவர் அணிந்திருந்த 2½ பவுன் செயினையும் மர்ம நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் 12 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News