செய்திகள்
ராஜஸ்தானில் 45 பக்தர்களுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு
ராஜஸ்தானில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு படகு இன்று திடீரென நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைக் காணவில்லை. அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
கோட்டா மாவட்டம் கடோலி அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பண்டி மாவட்டத்தின் இந்தர்கர் பகுதியில் உள்ள கமமேஷ்வர் மகாதேவ் கோவிலுக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் 45 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
படகு விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.