செய்திகள்
காதலரை கரம்பிடித்த இளவரசி மகோ

அரச பட்டத்தை துறந்தார் - எளிய முறையில் காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

Published On 2021-10-26 21:58 GMT   |   Update On 2021-10-26 21:58 GMT
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை பெற ஜப்பான் இளவரசி மகோ மறுத்துவிட்டார்.
டோக்கியோ:

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோ. இவரது மகள் மகோ (29). ஜப்பான் இளவரசியான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ (29) என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டார். 

5 ஆண்டுகளுக்கு பிறகு 2017-ம் ஆண்டில் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். இது ஜப்பான் ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. ஜப்பான் இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞரை மணப்பதை அந்த நாட்டின் பழமைவாதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

அரச குடும்பத்திலும் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இளவரசி மகோவின் தந்தை புமிகிடோ இதனை மறுத்தார். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சாமானிய நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும் என்பது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கமாகும்.

இந்த முடிவை மனதார ஏற்றார் இளவரசி மகோ. காதலரை கரம் பிடிக்க, தன்னுடைய அரச பட்டத்தை துறக்க தயார் என்றார். அது மட்டுமின்றி ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) பணத்தையும் பெற மகோ மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அரச குடும்பத்தின் சம்மதத்தோடு 2018-ம் ஆண்டே இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கீ கோமுரோவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் திருமணம் தள்ளி போனது. இதையடுத்து, கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடருவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம்தான் அவர் ஜப்பான் திரும்பினார்.

அதனை தொடர்ந்து இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பானிய அரச குடும்பத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடந்தது.

இதன் மூலம் அரச பட்டத்தை துறந்து, பாரம்பரிய சடங்குகளை பின்பற்றாமல் திருமணம் செய்து கொண்ட முதல் அரச குடும்பத்து பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார் இளவரசி மகோ.

திருமணத்தை முறைப்படி பதிவு செய்தபின் இளவரசி மகோ-கீ கோமுரோ தம்பதி பத்தரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது மகோ, “எனது திருமணத்தால் மக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கீ கோமுரோ ஈடுசெய்ய முடியாதவர். திருமணம் எங்களுக்கு அவசியமான தேர்வாக இருந்தது” என கூறினார்.

தொடர்ந்து கீ கோமுரோ பேசுகையில், “நான் மகோவை நேசிக்கிறேன். நமக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே கிடைக்கிறது. அதை நாம் விரும்பும் ஒருவருடன் செலவிட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே மகோ-கீ கோமுரோ திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

Tags:    

Similar News