செய்திகள்
திருச்செங்கோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
திருச்செங்கோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு மாங்குட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 37). இவர் மாணிக்கம் பாளையம் அரசு நர்சிங் கல்லூரியில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். ஜெயலட்சுமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போன தனது மாமனாருக்கு திதி கொடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.