வழிபாடு
நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

Published On 2022-02-08 05:52 GMT   |   Update On 2022-02-08 05:52 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம்நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம்நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தெப்பத்திருவிழாவின் 4-ம்நாளான நேற்று மாலை நம்பெருமாள் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாசம் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருவிழாவின் 5-ம் நாளான 8-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம் நாளான 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

9-ம் திருநாளான 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News