செய்திகள்
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய பெயிண்டர் கைது
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை ராஜாநகர் அன்னை தெரசா வீதியில் வசித்து வருபவர் சரளா (வயது34). இவர் கணவரை விட்டு பிரிந்து கடந்த 13 ஆண்டுகளாக வேல்முருகன் நகரை சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 4 மாதமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த ரமேஷ் கையால் சரளாவின் மூக்கில் குத்தினார். இதில் காயம் அடைந்த சரளா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரளாவை ரமேஷ் பார்க்க வந்தார். அப்போது அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சரளாவை தகாத வார்த்தைகளால் திட்டி முகத்தில் ரமேஷ் தாக்கினார். இதில் சரளாவின் உதட்டில் காயம் ஏற்பட்டது.
உடனே ஆஸ்பத்திரி வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரமேசை மடக்கி பிடித்து பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.