செய்திகள்
முக ஸ்டாலின்

டிஜிபி திரிபாதிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-11-25 16:59 GMT   |   Update On 2019-11-25 16:59 GMT
காவல்துறையில் தகவல் தொடர்பு தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்ட டிஜிபி திரிபாதிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

டிஜிபி திரிபாதி அனைத்து  காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவல்நிலையங்களில் அனைத்து தகவல்களும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் பரிந்துரைத்துள்ளதை சுட்டி காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் பணியாளர்கள் பராமரிக்கும் அனைத்து பதிவேடுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டுமெனவும், அனைத்து கடித தொடர்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து காவல் வாகனங்களிலும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டுமெனவும், அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர் பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வளர்ச்சித் துறை இயக்கத்தின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கவும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள டிஜிபி திரிபாதிக்கு வாழ்த்துகள். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக! என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News