செய்திகள்
திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.2¼ லட்சம் சிக்கியது

Published On 2019-10-24 05:12 GMT   |   Update On 2019-10-24 07:36 GMT
திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் மொத்தம் ரூ.2லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை 6.15 மணி அளவில் திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், கலெக்டர் அலுவலக தணிக்கை குழு அதிகாரி நாகசுப்பிரமணியம் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அலுவலகத்தில் இருந்து வெளியே யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் இருந்த செல்போன்களை போலீசார் வாங்கி கொண்டனர்.

அலுவலகத்தில் இருந்த ஆணையாளர் சுடலை மற்றும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் துருவி, துருவி தீவிர விசாரணை நடத்தினர். அங்குள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று, மேஜைகள், பீரோக்களை திறந்து போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டு இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஒன்றிய ஆணையாளர் சுடலையை திருச்செந்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்று, அங்கும் சோதனை நடத்தினர். அங்கும் போலீசார் ரொக்கப்பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீண்டும் ஒன்றிய அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனையானது இன்று காலை 4.30 மணி வரை நீடித்தது. திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் மொத்தம் ரூ.2லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News