ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு

Published On 2019-12-09 10:27 GMT   |   Update On 2019-12-09 10:27 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி ஒன்பது மாதங்களுக்கு பின் அதிகரித்துள்ளது.



இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் தனது வாகனங்கள் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.

விற்பனை குறையத் தொடங்கிய நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி சுசுகி நிறுவனம், இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து 1,47,669 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. மே மாதத்தில் உற்பத்தியை சுமார் 18 சதவீதம் குறைத்து 1,51,188 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது. 

ஜூன் மாதத்தில் அதன் உற்பத்தி 15.6 சதவீதம் சரிந்து 1,11,917-வாகனங்களாக இருந்தது. ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1.33 லட்சம் வாகனங்களை தயாரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் அது 25 சதவீத சரிவாக இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் அதன் உற்பத்தி 34 சதவீத சரிவுடன் 1,11,370-ஆக இருந்தது. 



செப்டம்பர் மாதத்தில் 1,32,199 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,60,219-ஆக இருந்தது. அந்த வகையில் உற்பத்தி 17 சதவீதம் சரிவடைந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி சுமார் 21 சதவீதம் குறைந்து 1,19,337 வாகனங்களாக இருந்தது.

மாருதி சுசுகியின் வாகனங்கள் உற்பத்தி 9 மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் நவம்பர் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. ஆக, உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News