செய்திகள்
ஆதார் இணைப்பு

ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2019-10-22 22:49 GMT   |   Update On 2019-10-22 22:49 GMT
‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான அனைத்து வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
புதுடெல்லி:

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிக்கணக்கு வைத்துள்ளனர்.

தேச பாதுகாப்புக்கு குந்தகமான தகவல்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும்போது, அதை அனுப்பியவரை கண்டறிய வழிவகை இல்லை. எனவே, சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகளை பரிசீலித்து வருகிறது. இது, தனிநபர் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்று ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகளும், மும்பை, மத்தியபிரதேச ஐகோர்ட்டுகளில் தலா ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, ‘பேஸ்புக்’ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 24-ந் தேதி ‘பேஸ்புக்’ மனு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்று 3 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த மனு, நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு களை மாற்றுவதற்கான தனது எதிர்ப்பை கைவிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தனிநபர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதற்காக, மத்திய அரசு இந்த விதிமுறையை கொண்டுவரவில்லை. தேச பாதுகாப்புக்காகவே கொண்டு வருகிறது” என்று விளக்கம் அளித்தார். அந்தரங்க உரிமையை மீறும் செயல் என்று கூறிய மனுதாரர்களை அவர் சாடினார்.

அப்போது, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “ஒரு பயங்கரவாதி தனக்கு அந்தரங்க உரிமை இருப்பதாக கோர முடியாது” என்று கூறினார்.

இதையடுத்து, ‘பேஸ்புக்’ மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டனர். ஜனவரி மாதம் கடைசி வாரம் உரிய அமர்வு முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதி முன்பு எல்லா வழக்குகளையும் முன்வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கையை ஜனவரி மாதம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
Tags:    

Similar News