செய்திகள்
கோப்புபடம்

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் - உடுமலை வயல்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

Published On 2021-10-13 06:24 GMT   |   Update On 2021-10-13 06:24 GMT
இலைகளை மடக்கி அல்லது இரண்டு இலைகளை இணைத்து பச்சையம் சுரண்டி காணப்படும். அதனை பிரித்து பார்த்தால் இளம் பச்சை நிற புழு தென்படுவது இதன் அறிகுறியாகும்.
உடுமலை:

உடுமலை வட்டாரம் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் அமல்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் வயல் ஆய்வு செய்தனர். அப்போது  ஒரு சில பகுதிகளில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் காணப்பட்டது. 

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :

இலைச்சுருட்டு புழு தாக்குதல் ஒரு சில இடங்களில் பொருளாதார சேத நிலைக்கு கீழ் காணப்படுகிறது. இலைகளை மடக்கி அல்லது இரண்டு இலைகளை இணைத்து பச்சையம் சுரண்டி காணப்படும். 

அதனை பிரித்து பார்த்தால் இளம் பச்சை நிற புழு தென்படுவது இதன் அறிகுறியாகும். இவ்வாறு காணப்படும் பகுதிகளில் 100 குத்துக்கு 10 குத்துக்களுக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். வரப்புகளை களைகள் இன்றி பராமரிக்க வேண்டும்.

அசாடிராக்டின் 0.03 சதவீதம் கரைசல் ஏக்கருக்கு  400 மில்லி அல்லது வேம்பு விதை கரைசல் 5 சதவீதம் அல்லது குளோரன்ட்ரானிப்ரோல் 18.5 சதவீதம் ஏக்கருக்கு 60 கிராம் என்ற அளவில் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.

இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர். 
Tags:    

Similar News