கோவையில் 2 மூதாட்டிகளிடம் 10 பவுன் செயின் பறிப்பு
கோவை:
கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே உள்ள அண்ணாவீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சுகந்தி (வயது 64).
நேற்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் சுகந்தி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் சுகந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 4 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். சாய்பாபா காலனி பாரதி பார்க் 8-வது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சம்பூரணம் (67).
நேற்று இவர் என்.எஸ்.ஆர். ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சம்பூரணம் அருகே வந்து முகவரி கேட்டனர். அவர் சொல்லிக்கொண்டு இருந்த போது கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை வாலிபர்கள் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து சம்பூரணம் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.