இந்தியா
சாலை டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்... குழந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாப மரணம்
புத்தாலபட்டு-நாயுடுபேட்டை சாலையில் சந்திரகிரி மண்டலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதியது.
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இன்று ஒரு கார் விபத்துக்குள்ளானது. புத்தாலபட்டு-நாயுடுபேட்டை சாலையில் சந்திரகிரி மண்டலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
காரில் மொத்தம் 8 பேர் பயணித்தனர். இதில், பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டிவைடரில் மோதியபோது பெட்ரோல் டேங்க் உடைந்து பெட்ரோல் கசிந்ததால் கார் தீப்பிடித்துள்ளது.