செய்திகள்
விண்ணப்பித்த அனைவருக்கும் திருமண நிதி வழங்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
மலை போல் குவிந்திருக்கும் சாக்கடை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
உடுமலை:
உடுமலை தனியார் மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் உடுமலை நகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாக்கடை திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். மலையாய் குவிந்திருக்கும் சாக்கடை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மத்திய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து பல நாள் கிடப்பில் கிடக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக திருமண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். நகர பொறுப்பாளர் தெய்வகுமார், மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரம் , மாநிலக்குழு உறுப்பினர் ஓசூர் வைத்தியலிங்கம், மாவட்ட செயலாளர் மூர்த்தி ,அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தமிழர் பண்பாட்டு பேரவை இணை தலைவர் பால் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தில் இணைந்துள்ள சுமார் 300 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையை வழங்கி அதிலுள்ள பயன்களைப் பற்றி விவரித்தனர். கூட்டத்தில் உடுமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.