ஆன்மிகம்
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

Published On 2021-11-09 08:55 GMT   |   Update On 2021-11-09 08:55 GMT
முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது. சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காண்போம்...!

முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருகப்பெருமான் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர். சூரபத்மனையும், அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன்பதக்கத்தை முருகன் பெற்றார்.

முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டன. சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுக சூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் வந்தான்.

ஆனால் முருகப்பெருமானின் வேல், சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்து, அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி, மாறி மாயத்தால் தப்பினான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது.

சூரபத்மன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது. பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி, மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு ஆனது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் தலத்துக்கு முருகப்பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த 6 முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.

திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்-பார்வதிதேவியை முருகன்-தெய்வானையுடன் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருகப்பெருமான் நீலமயில் மீது ஏறி குன்றிலே தேவசேனாதேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.

முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
Tags:    

Similar News