தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம்

நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழகத்திற்கு ஒப்படைக்க திமுக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஓபிஎஸ்

Published On 2022-04-15 11:00 GMT   |   Update On 2022-04-15 11:00 GMT
தமிழ்நாடு சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசை வலியறுத்துமாறு அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு, பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும், மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கிட்டத்தட்ட 5,125 மருத்துவ இருக்கைகளில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகின்றன. இதேபோன்று ஒவ்வொரு மாநில அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை ஒதுக்குகின்றன. இந்த இடங்களை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கும் பணியினை மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் - கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கலந்தாய்வுக் குழு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழு 2021-2022 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான நான்கு கலந்தாய்வுகளை முடித்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான இரண்டு இடங்கள், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கான ஐந்து இடங்கள், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் என 24 இடங்கள் இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்படாமல் காலியாக உள்ளதாகவும், இது தவிர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

பொதுவாக, இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன், மத்தியக் கலந்தாய்வுக் குழுவினால் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இருப்பினும் இந்த ஆண்டு, மருத்துவச் சேர்க்கைக்கான இறுதி நாள் முடிந்த பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நிரப்பப்படாத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இன்னமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகள் உட்பட கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மாணவ, மாணவியர் மருத்துவம் பயிலும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 24 மருத்துவ இருக்கைகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்கவிருக்கும் 4 மருத்துவ இருக்கைகள் தகுதியுடைய ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு, நான்கு கலந்தாய்வுகளுக்குப் பின்பும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த இருக்கைகளை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட தகுதியுடையோர் மத்தியில் நிலவுகிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கவும், மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News