செய்திகள்
மரணம்

கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

Published On 2020-01-14 06:59 GMT   |   Update On 2020-01-14 06:59 GMT
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 2 ஆண்கள் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பலியான இருவரும் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு சுமார் 50 வயது இருக்கும். தண்டவாளத்தை கடந்தபோது ஆந்திரா மார்க்கமாக சென்ற ரெயில் மோதி இருவரும் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் லுங்கி, சட்டை அணிந்து இருந்தனர்.

எனவே அவர்கள் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து ஆரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News