செய்திகள்
சி.ஏ.ஏ. திருத்தச் சட்ட விதிகளை வகுக்க ஆறு மாதம் கூடுதல் அவகாசம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு விதிகளை வகுப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கான விதிகளை வரையறை செய்வதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகய் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ‘‘2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு விதிகளை உருவாக்குவதற்கு வரும் 2022, ஜனவரி 9-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று பதிலளித்தார்.
2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் இயற்றப்பட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி 10-ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கான காலக்கெடுவினை 2022-ம் ஆண்டு ஜனவரி 10 வரை நீட்டிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று நித்யானந்தராய் கூறியுள்ளார்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உரிய ஆவணங்கல் இல்லாமல் இந்தியாவில் பெயர்ந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்வது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதலளித்த ஆறு மாதத்திற்கு உள்ளாக இந்த சட்டத்திற்கான விதிகளை வகுக்க வேண்டும் அல்லது கூடுதலாக அவகாசம் பெற வேண்டும். இதனடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை வகுக்க அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது.