தனியார் வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் மோசடி
ஆலந்தூர்:
திருவொற்றியூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக 10 வருடங்களாக வேலை செய்து வருகிறார். அந்த வங்கியில் ஆதம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் வாடிக்கையாளர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் பெற்றார். அந்த நகைகளை சுப்பிரமணியன் மதிப்பீடு செய்து கடன் தொகையை நிர்ணயித்துள்ளார்.
இந்த நிலையில் வங்கி லாக்கரில் உள்ள நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராஜம்மாள் அடகு வைத்த நகை அனைத்தும் போலியானது என தெரிய வந்தது. இந்த மோசடிக்கு மதிப்பீட்டாளர் சுப்பிரமணி உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சீனிவாசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினார்கள். வாடிக்கையாளர் ராஜம்மாளும், மதிப்பீட்டாளர் சுப்பிரமணியனும் சேர்ந்து போலி நகையை வைத்து பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். ராஜம்மாளை தேடி வருகிறார்கள்.