செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2021-09-20 04:01 GMT   |   Update On 2021-09-20 10:01 GMT
அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பருவ மழை பெய்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த நிலையில் நேற்று மழை குறைந்ததால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 112 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 277 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் இன்று காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 73.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 72.97 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News