ரஜினியின் கருத்து முதல்- அமைச்சருக்கு எதிரானது அல்ல: வானதி சீனிவாசன் பேட்டி
கோவை:
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பா.ஜனதாமாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. முதல்-அைமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர் கருத்தை தெரிவித்துள்ளார். யார் முதல்- அமைச்சராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் எந்த நேரத்தில் எந்த பொறுப்பு யாருக்கு வருமென தெரியாது. நீண்ட காலம் பணியாற்றி மக்களோடு தொடர்புடையவர்களுக்கு அரசியல் இடமுண்டு.
அரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதல்-அமைச்சர் குறித்து ரஜினி கூறியுள்ளார். அது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல. ரஜினிகாந்த் அரசியலில் அதிசயம் நிகழும் என தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் எப்படி அமையுமென்பதை காலம் தான் சொல்ல வேண்டும். தேர்தல் போட்டி மற்றும் கட்சி பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பா.ஜனதா கருத்து. வெற்றிடம் இல்லை என்பது அ.தி.மு.க. கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.