தொழில்நுட்பம்
காக்னிசன்ட் நிறுவனத்தில் 18,000 பேரை பணி நீக்க முடிவு
சிக்கன நடவடிக்கை காரணமாக 18,000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே சென்னையில் தான் அதிக கிளைகளை கொண்டுள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அதில், 2 லட்சம் பேர் இந்தியர்கள்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்குவது, கம்ப்யூட்டர் நிர்வாக மேலாண்மையை மேற்கொள்வது போன்றவற்றை காக்னிசன்ட் செய்து வருகிறது.
இதேபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் காக்னிசன்ட் செய்து வந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து காக்னிசன்ட் விலக உள்ளது. இதன் காரணமாக காக்னிசன்ட் நிறுவனத்துக்கு வரும் வருமானம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சரிக்கட்டவும், ஏற்கனவே உள்ள செலவினங்களை குறைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று காக்னிசன்ட் முடிவு செய்து இருக்கிறது. முதற்கட்டமாக 7000 பணியாளர்கள் நீக்கப்பட உள்ளனர். ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளவர்கள், நடுநிலை பணியில் உள்ளவர்கள் இந்த வேலை நீக்கத்துக்கு ஆளாவார்கள்.
மேலும் 5000 ஊழியர்கள் திறமை மேம்படுத்துவதற்காக உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், திறமை குறைவானவர்கள் நீக்கப்படுவார்கள். அது மட்டும் அல்லாமல் வரும் மாதங்களில் படிப்படியாக பலரை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 18,000 பேரை பணி நீக்கம் செய்வதற்கு காக்னிசன்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.