செய்திகள்
நீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

Published On 2020-10-11 11:26 GMT   |   Update On 2020-10-11 11:26 GMT
திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தன்நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 49). கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன் பூபதி (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பூபதி தனது நண்பர்களுடன் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். பூபதிக்கு நீச்சல் தெரியாது. இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் நீச்சல் பழகினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பூபதி நீரில் மூழ்கினார். இதை பார்த்து செய்வதறியாது திகைத்த அவரது நண்பர்கள், அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் பூபதி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோனார்.

இதற்கிடையே வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தனது மகனை முருகானந்தம் தேடினார். அப்போது அவர் கிணற்றில் மூழ்கி பலியான தகவலை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் மாணவர் கிணற்றில் மூழ்கியது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News