செய்திகள்
கோப்பு படம்

போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு

Published On 2019-12-02 09:37 GMT   |   Update On 2019-12-02 09:37 GMT
ஆரணி அருகே போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் எந்த அடிப்படையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களின் நகல்களை வழங்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர் லட்சுமணன் (40). நிலத்தரகர். இவர் மணல் கடத்தல் குறித்து மனுக்கள் அளித்து வருகிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் களம்பூர் போலீசார் ரவுடிகள் பட்டியலில் அவரை சேர்த்தனர். என்ன அடிப்படையில் தன் பெயர் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளுக்கு லட்சுமணன் கடிதம் எழுதினார்.

அவர்கள் உரிய பதில் அளிக்காததால் இதுபற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டு மனு கொடுத்தார்.

தகவல் ஆணையர் தட்சிணாமூர்த்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது லட்சுமணன் மனு குறித்து விசாரணை நடத்தினார். லட்சுமணன் எந்த அடிப்படையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களின் நகல்களை வழங்க வேண்டும். மேலும் தகவல் ஆணையத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக லட்சுமணன் கூறியதாவது:-

நான் கடந்த 2015-ம் ஆண்டு களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்குவதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து என்னை ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர். என்மீது 3 வழக்கு உள்ளதாக தெரிவித்தனர். அதில் 2 வழக்கு என் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போடப்பட்டது.

அந்த வழக்குகளில் இருந்து 2015-ம் ஆண்டிலேயே விடுதலையாகி விட்டேன். அதற்கு பிறகும் அந்த வழக்குகளை என்மீது சேர்த்துள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக லஞ்ச புகார் கொடுத்ததால் திட்டமிட்டு என்னை ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்டேன். இது தொடர்பாக போலீசார் அவர்களது நகலை ஒப்படைக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News