செய்திகள்
வலங்கைமானில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சம்
வலங்கைமானில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அனைத்து வார்டுகளிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று வலங்கைமான் பகுதியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கைலாசநாதர் கோவில் தெருவில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த தெருவை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தகரத்தால் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். வலங்கைமான் பகுதியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் தேவையின்றி வெளியே பொதுமக்கள் சுற்றி வருகின்றனர்.
எனவே வலங்கைமானில் உள்ள 15 வார்டுகளிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். வலங்கைமான் தெருக்களில் சிறப்பு காய்ச்சல் முகாம், தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். பேரூராட்சி சார்பில் அனைத்து தெரு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.