உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருச்செங்கோடு அருகே விசைத்தறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை

Published On 2022-01-26 07:36 GMT   |   Update On 2022-01-26 07:36 GMT
திருச்செங்கோடு அருகே விசைத்தறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் கோயக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). இவருடைய மனைவி நீலாம்பாள் (50). இவர்களுக்கு பிரீத்தி (21), ஷாலினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்களில் பிரீத்திக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் ஷாலினி பிளஸ்-2 படித்து வந்தார்.

வெங்கடாசலம் சொந்தமாக பெரிய அளவில் விசைத்தறிப்பட்டறை நடத்தி வந்தார். இவர் தனது மூத்த மகள் பிரீத்தியை ராசிபுரத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெங்கடாசலம், இவரது மனைவி நீலாம்பாள், மகள் ஷாலினி ஆகியோர் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து திருச்செங் கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியத்தில் உருக்கமான தகவல் கிடைத்தது.

வெங்கடாசலம் சொந்தமாக விசைத்தறி தொழில் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்து. இதனால் 3 மாடி வீடு கட்டினார். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் தான் வெங்கடாசலம் வாழ்க்கையில் விதி விளையாடியது. கொரோனா முதல் அலை, 2-ம் அலை உள்ளிட்டவைகளால் அவருக்கு விசைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கி விசைத்தறி தொழிலை மேற்கொண்டு நடத்தி வந்தனார். இருப்பினும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் வெங்கடாசலம் தனக்கு சொந்தமான தறிகள் சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, மீதம் இருந்த விசைத்தறிகளை வாடகைக்கு விட்டார். வாடகைக்கு விட்டதிலும் அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடன் சுமை மேலும் மேலும் எகிறி கொண்டே போனது.

ஏற்கனவே தறிகளை விற்ற மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதுவும் கவலையை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் விசைத்தறி தொழிலில் நஷ்டம், மறுபக்கம் கடன் சுமை ஆகியவற்றால் மேற்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் அவர்கள் தவித்து வந்தனர். தினம் தினம் மனவேதனையில் வாழ்வதை விட உயிரை விடுவதே மேல் என முடிவு செய்து வெங்கடாசலம், அவரது மனைவி நீலாம்பாள், மகள் ஷாலினி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News