தமிழ்நாடு
நாகர்கோவில், அகஸ்தீஸ்வரத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை- விஜய் வசந்த் எம்.பி. உறுதி
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தை சேர்ந்த வார்டுகளில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.
நாகர்கோவில்:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தை சேர்ந்த வார்டுகளில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றிற்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விஜய் வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
அதேபோல், அகஸ்தீஸ்வரத்தில் நடந்த மக்கள் குறை கேட்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் அரசாங்கம் மூலம் தீர்வு காண வேண்டிய மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றிற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
வேலை வாய்ப்பிற்காக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டதை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு முகாம் ஒன்று கூடிய விரைவில் நடத்தப்படும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
இன்றைய முகாமில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் இராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.