உள்ளூர் செய்திகள்
இறைச்சி கடையில் அலைமோதிய மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2022-01-15 07:32 GMT   |   Update On 2022-01-15 07:32 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரிநாளையொட்டி இன்று இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கரி நாள் கொண்டாடுவது வழக்கம். அதுபோல இன்றும் பல்வேறு கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கரிநாள் கொண்டாட்டம் நடந்தது. 

மேலும் காணும் பொங்கலும் கொண் டாடப்பட்டது. இதனையொட்டி கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தினார்கள். மக்கள் கூட்டமாக கூடாதபடி சமூக இடைவெளியை கடைபிடித்து பல்வேறு இடங்களில் இன்று விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மாடுகள் வைத்துள்ள விவசாயிகள் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடினார்கள். மாடுகளுக்கு கொம்பில் வர்ணம் பூசி, நன்றாக குளிப்பாட்டி, பூஜைகள் செய்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்தனர். மாடுகளுக்கு கரும்புகளையும் சாப்பிடக் கொடுத்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பொங்கலுக்கு மறுநாள் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம். 

ஆனால் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்து உள்ளதால், பெரும் பாலான சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சிறிய பூங்காக்கள் மற்றும் கோவில்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தனர்.

பெரும்பாலான வீடுகளில் இன்று அசைவ உணவு சமைப்பது வழக்கம்.இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. 

தென்காசி நகராட்சி பகுதியில் மட்டும் இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று இன்று இறைச்சிகளை வாங்கி சென்றனர். 

நெல்லை பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் பல கடைகளில் இன்று இறைச்சி வாங்க கடும் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கரி நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. போலீசாரும் பல்வேறு பகுதிகளில் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர்.

Tags:    

Similar News