உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 3,194 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 4 வது அலையை தடுக்கும் வகையில் நாளை மறுநாள் 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 4 வது அலையை தடுக்கும் வகையில் நாளை மறுநாள் 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.
தடுப்பூசி காரணமாக கொரோனா 3-ம் அலையில் பெருமளவு மக்கள் பாதிப்பு ஏற்படுத்தாமல் அவர்கள் லேசான அறிகுறியுடன் குணமடைந்தனர்.
இதையடுத்து தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளைமறுநாள் (8-ந்தேதி) அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,260 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.