செய்திகள்
கோப்புபடம்

அரசு அறிவிப்பின்படி திருப்பூரில் சாய ஆலைகள் இயக்கம்

Published On 2021-06-10 08:15 GMT   |   Update On 2021-06-10 13:08 GMT
சாய ஆலையை பொறுத்தவரை 30 பேர் பணிபுரியும் ஒரு ஆலையை வெறும் 3 தொழிலாளரை கொண்டு இயக்க முடியாது.
திருப்பூர்:

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு 147 சாய ஆலைகள், தனியார் சுத்திகரிப்பு மையங்களுடன் 100 சாய ஆலைகள் இயங்குகின்றன. தமிழக அரசு ஊரடங்கு தளர்வில்  ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், பிரின்டிங் போன்ற பல்வேறு வகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளன. 10 சதவீத தொழிலாளருடன் செயல்பட முடியாத நிலை உள்ளதால் சாய ஆலைகள் தொடர்ந்து இயக்கத்தை நிறுத்திவைத்துள்ளன. வரும் 14-ந்தேதிக்கு பின் அரசு அறிவிப்புகளை பொறுத்து இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:-

சாய ஆலை துறையை பொறுத்தவரை 30 பேர் பணிபுரியும் ஒரு ஆலையை வெறும் 3 தொழிலாளரை கொண்டு இயக்க முடியாது. மொத்த ஆர்டர்கள் மட்டுமின்றி, சாம்பிள் ஆர்டர்களை கூட கையாள முடியாது. மின்சாரம், விறகு பயன்பாடு என சாய ஆலைகளுக்கு பெரும் நஷ்டமே ஏற்படும்.

எனவே  திருப்பூர் சாய ஆலைகள் இயக்கம் வரும் 13-ந்தேதி வரை தொடர்ந்து நிறுத்திவைக்கப்படுகிறது. அரசு அறிவிப்பை பொறுத்து 14-ந் தேதி முதல் ஆலைகள் இயக்கத்தை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News