ஆன்மிகம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகையையொட்டி தீபம் ஏற்றிய போது எடுத்தபடம்.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

Published On 2020-11-30 03:59 GMT   |   Update On 2020-11-30 03:59 GMT
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கார்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் ரதரோஹனம் (சிறிய தேரில்) சாமி புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிநாதசாமிக்கு தங்க கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது.

பின்னர் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து தீப காட்சியும், சொக்க பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) காலை கோவில் வளாகத்தில் உள்ள வஷ்ரதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீசார் செய்திருந்தனர். கார்த்திகையையொட்டி கும்பகோணத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News