செய்திகள்
நவீன சாண எரிவாயு கலன்-விவசாயிகள் எதிர்பார்ப்பு
சாண எரிவாயு அழுத்தம் குறைவு என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக கால்நடை வளர்ப்பின் வாயிலாக கிடைக்கும் சாணத்தை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சாணத்தை அதற்கான உரக்கிடங்குகளில் கொட்டி வைத்துள்ளனர்.சிலர் இயற்கை முறையில் நவீன சாண எரிவாயு கலன் அமைத்துள்ளனர்.அதேநேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகள் உரம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கின்றனர்.எனவே, மானியத்தில் சாணஎரிவாயு கலன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
தற்போதுள்ள விலைவாசி உயர்வால் நடுத்தர விவசாயிகள் பெரிதும் பாதிக்கின்றனர். அவர்களுக்கு சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் வழங்கி அரசு உதவ வேண்டும். இதன் வாயிலாக எரிபொருள் செலவு மிச்சமாகும். சாண எரிவாயு அழுத்தம் குறைவு என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.சாண எரிவாயு கலன் அமைப்பதன் வாயிலாக சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும் என்றனர்.