வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 11-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-12-08 06:45 GMT   |   Update On 2021-12-08 08:32 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த விழாக்களில் மூலவரான நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

வேறு எந்த கோவில்களிலும் இந்த சிறப்பை காண இயலாது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

விழாவில் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், மாலை 4 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.

வருகிற 21-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News