செய்திகள்
பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2019-10-21 11:10 GMT   |   Update On 2019-10-21 11:10 GMT
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு என சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் நோயாளிகளிடம் டாக்டர்கள் உரிய சிகிச்சைகள் அளிக்கிறார்களா? என்று கேட்டறிந்தார். மேலும் அவர் டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் சாந்தா பதிவேடுகள் வைப்பறைக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பார்வையிட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

பின்னர் பூலாம் பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற கலெக்டர் சாந்தா, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது இணை இயக்குனர் (பொறுப்பு) இளவரசன், துணை இயக்குனர் (பொறுப்பு) ஹேமந் காந்தி, பெரம்பலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சரவணன், டாக்டர்கள் கலைமணி, மனோஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News