தொழில்நுட்பம்
நவம்பர் மாதத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோவை முந்திய வோடபோன் ஐடியா
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை வோடபோன் ஐடியா நவம்பர் மாதத்தில் முந்தியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக தரமான வாய்ஸ் கால் சேவை வழங்கி உள்ளது. இதனை அந்நிறுவன பயனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்களை கணக்கிடப்பட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையில் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் 5-க்கு 4.1 புள்ளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ 5-க்கு 3.8 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக 88.4 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.24 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 3.62 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.