செய்திகள்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய கர்நாடக தம்பதி

Published On 2019-04-24 04:03 GMT   |   Update On 2019-04-24 04:03 GMT
சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். #SriLankablasts
மங்களூரு:

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 359 பேர் மரணம் அடைந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த குண்டுவெடிப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூரை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் சரபத்கட்டே பகுதியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்கள் கடந்த 21-ந்தேதி இலங்கைக்கு சென்றனர். அந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்களுக்கு இலங்கை கொழும்பு நகரில் உள்ள ‘தி சின்னமோன் கிராண்ட்’ (குண்டு வெடித்த ஓட்டல்) என்ற ஓட்டலில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே சுற்றுலா நிறுவனம், அவர்களுக்கு அந்த ஓட்டலுக்கு பதிலாக அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்தது. இதனால் அவர்கள் அந்த ஓட்டல் அறையில் இருந்தனர். அப்போது தான் ‘தி சின்னமோன் கிராண்ட்’ ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த ஓட்டலில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

தனியார் சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் உயிர் தப்பிய தகவலை கேட்டு வேனூரில் உள்ள தம்பதியின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடவுள் அருளால் கேசவராஜூம், ஸ்ரீதேவியும் உயிர் பிழைத்து உள்ளனர்’ என்றனர். #SriLankablasts
Tags:    

Similar News