கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 7 ஆயிரம் பேர் பங்கேற்பு- தமிழக கவர்னர் தகவல்
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்தும், அதை கண்டறிந்து தடுப்பது பற்றியும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கவர்னர், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான அளவு உயிர்காக்கும் மருந்துகளை வைத்திருக்க வேண்டும். தேவையான அளவு மருத்துவ ஆக்சிஜன் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இவற்றை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி செய்ய வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.
கொரோனா நோயை எதிர்க்கும் நடவடிக்கைகளில் 7 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணிபுரிவார்கள்.
இந்த முன்னாள் ராணுவ வீரர்களின் சேவையை உயர் அதிகாரிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 7 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தேவையான பணிகளை செய்ய நியமிக்கப்படுவார்கள். இது மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் உதவியாக அமையும்.
இதன் மூலம் கொரோனா பரவல் தடுப்பு பணி சிறப்பாக அமையும் என்று கவர்னர் தெரிவித்தார்.