செய்திகள்
குடும்ப தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனுக்கு வலைவீச்சு
புதுவையில் குடும்ப தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:
பாகூர் கிருமாம்பாக்கம் பேட் இந்திராநகரை சேர்ந்தவர் முருகன் (31). இவரது மனைவி அம்மா பொண்ணு மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை சரியாக கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால் வீட்டை காலி செய்தார்.
பின்னர் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி தட்சிணாமூர்த்தி என்பவரது வீட்டில் முருகன் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தங்கி விட்டார். இதனை அறிந்த தட்சிணாமூர்த்தியும், அவரது மனைவி சாந்தியும் எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டனர். இதற்கு தனக்கும், இந்த வீட்டில் பங்கு உண்டு என முருகன் கூறினார்.
இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. மேலும் முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை காலில் குத்தினார். இதில், காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிசச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன் வந்திரி, ஓட்டு லூர்துநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து முருகன் மற்றும் அவரது மனைவி அம்மா பொண்ணுவை தேடி வருகின்றனர்.