மாமனார்-மாமியாரை தாக்கி வீடுசூறை- கட்டிட தொழிலாளி கைது
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் நாகம்மன் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் . இவர்களது மகள் நித்யா (வயது23)வை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கார்த்திக்கேயன் (26) என்பவர் காதலித்து கடந்த ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
இதற்கிடையே குடிப்பழக்கம் உள்ள கார்த்திக்கேயன் தினமும் மதுகுடித்துவிட்டு நித்யாவை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார். அதுபோல் கடந்த 5 மாதத்துக்கு முன்பு கார்த்திக்கேயன் மதுகுடித்துவிட்டு நித்யாவை அடித்து உதைத்ததால் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
அதுமுதல் கார்த்திக்கேயன் தினமும் மதுகுடித்து விட்டு மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமனார் குமாரிடம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் குமார் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நித்யா தனது குழந்தையுடன் சினிமாவுக்கு சென்று விட்டார். அப்போது குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்ற கார்த்திக்கேயன் அங்கு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உதைத்து சூறையாடினார்.
இதனை தட்டிக்கேட்ட குமார் மற்றும் அவரது மனைவி மலர், மற்றொரு மகள் சுருதி மற்றும் உறவினர் பொன்னி ஆகிய 4 பேரையும் கார்த்திக்கேயன் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து குமார் மனைவி மலர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து கார்த்திக்கேயனை கைது செய்தார். பின்னர் கார்த்திக்கேயனை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சப்-ஜெயிலில் அடைத்தனர்.