செய்திகள்
அசாதுதின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு
மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை சேர்ந்த அசாதுதின் ஒவைசி மேற்கு வங்காள மாநிலத்தில் வரும் 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
புதுடெல்லி:
ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்தக் கட்சி அகில இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்குடன் இருக்கிறது.
பீகார் மாநில தேர்தலில் மஜ்லிஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. பல இடங்களில் இந்த கட்சி அதிகளவில் ஓட்டுக்களைப் பிரித்தது. இதன் காரணமாகவே அங்கு லல்லு பிரசாத் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தில் மஜ்லிஸ் கட்சி களம் இறங்குகிறது. மேற்கு வங்காளத்தில் மூர்ஷிதாபாத், மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று கருதி இந்த பகுதியில் அதிகளவில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. வரும் 13ம் தேதி முதல் ஓவைசி அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
இதேபோல், தமிழகத்திலும் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தில் போட்டியிடும் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.