உள்ளூர் செய்திகள்
காலை முதல் ஏராளமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்த காட்சி

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடலூர் உழவர் சந்தையில் 60 டன் காய்கறிகள்-பழ வகைகள் வரத்து

Published On 2022-01-13 10:09 GMT   |   Update On 2022-01-13 10:09 GMT
பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை ஆர்வமாக வாங்கிக்கொண்டு சென்றனர்.
கடலூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி பொங்கல், மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடு வது வழக்கம்.

அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 டன் காய்கறிகள், 5 டன் பழவகைகள், 10 டன் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்தும், உழவர் சந்தைக்கு வந்தது. பின்னர் உழவர் சந்தை வெளியில் சாலையோரத்தில் ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள், கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து என 20 டன்னுக்கு மேல் வந்தடைந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை ஆர்வமாக வாங்கிக்கொண்டு சென்றனர். மேலும் வாழைத்தார் பண்டிகை காலம் என்பதால் 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வாழைத்தார் ரகத்திற்கு தகுந்தார்போல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

இதன் காரணமாக காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உழவர் சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்ததால் கடலூர் சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நேற்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்த நிலையிலும் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் காரணமாக போலீசார் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News