செய்திகள்
இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கு- ஜாமீனில் வெளியே வந்தார் காமெடி நடிகர் முனாவர் பரூக்கி
இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்திய காமெடி நடிகர் முனாவர் பரூக்கி, இந்து தெய்வங்கள் குறித்து, தரக்குறைவான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இந்த வழக்கில் முனாவர் பரூக்கியை போலீசார் கைது செய்தனர். முனாவரின் ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அத்துடன் உத்தர பிரதேசத்தில் உள்ள வழக்கில் அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்டிருந்த வாரண்டு உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.
இதனையடுத்து ஜாமீன் நடைமுறைகள் முடிந்த நிலையில், முனாவர் பரூக்கி நேற்று இரவு இந்தூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
உத்தர பிரதேச நீதிமன்றத்தில் இருந்து எந்த தகவலும் வராததால் முனாவர் பரூக்கியை விடுதலை செய்யாமல் மத்திய பிரதேச அதிகாரிகள் காலம்தாழ்த்தினர். அதன்பின்னர், உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீதிமன்ற உத்தரவை இணைதளத்தில் சரிபார்த்து, உத்தரவை நிறைவேற்றும்படி கூறியதாகவும், அதன்பிறகே முனாவர் பரூக்கி விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.