செய்திகள்
நாடு தழுவிய ஊரடங்கிற்கான அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. இரண்டு வாரத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் கடைசியாகத்தான் ஊரடங்கு வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். உங்கள் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என பிரமதர் தெரிவித்திருந்தார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இப்படி சென்று கொண்டிருந்தால் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை குறைக்க நாடு தழுவிய ஊரடங்குதான் ஒரே வழி என பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு ஒன்றே தீர்வு எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் தலைவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மருத்துவ ஆலோசகரும் இதே கருத்து வலியுத்தியுத்தள்ளனர். பெரும்பாலான மக்களும் ஊரடங்கு அமல்படுத்தினால் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது என கருதுகின்றனர்.
இதனால் பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கிற்கான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஊரடங்கை அமல்படுத்தியபோது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். ஆயிரக்கணக்கானோர் நடந்து சொந்த ஊர் செல்ல முயன்றனர். அப்போது சாப்பாடு இல்லாமல் உயிரிழந்த மோசமான சம்பவம் நடைபெற்றது. பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதுபோன்ற சிக்கல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மோடி நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த யோசிக்கலாம்.