செய்திகள்
விபத்து

மத்தூர் அருகே டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து வாலிபர் பலி

Published On 2021-10-25 06:02 GMT   |   Update On 2021-10-25 06:02 GMT
மத்தூர் அருகே டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பொம்மேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் இவர் நேற்றுமாலை கிருஷ்ணா வரம் கூட்டுச்சாலை பகுதியில் விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம் மண்ணை ஏற்றி கொண்டு கொட்டி விட்டு சென்றார். அப்போது அப்பகுதியில் சென்ற போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் உள்ள தண்ணீர் இல்லாத 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் பாய்ந்தது. இதில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த வாலிபர் சங்கர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் பாய்ந்து இறந்த சங்கரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி தாமதமானதால் பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிரேன் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் வாலிபர் சங்கர் உடலையும், டிராக்டரையும் மீட்டனர்.

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் மத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Tags:    

Similar News