செய்திகள்
பலியான மாணவர் சரண்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 10-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2019-11-05 07:31 GMT   |   Update On 2019-11-05 07:31 GMT
தக்கலை அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 10-ம்வகுப்பு மாணவர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தக்கலை:

தக்கலை அருகே குழிக்கோடு, ஒடனாவிளையைச் சேர்ந்தவர் சந்திரகுமார்.

இவரது மகன் சரண் (வயது 14). இவர், தக்கலை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை சரண் நண்பர் கார்த்திக்குடன் பள்ளிக்கு சென்றார். பாதி தூரம் சென்றபோது பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகத்தை எடுக்காமல் வந்ததை அறிந்தார்.

உடனே அவர், நண்பரின் தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்றார். அவருடன் கார்த்திக்கும் இருந்தார். இருவரும் வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு திரும்பினர்.

மோட்டார் சைக்கிளை சரண் ஓட்டினார். கார்த்திக் பின்னால் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் கோழிப்போர் விளை சென்றபோது திடீரென நிலை தடுமாறியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சரணும், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சரணுக்கு தலையில் பலத்த காயம் பட்டது.

அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சரணின் நண்பர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் இறந்த சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சரண் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர். அவர்கள் சரணின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
Tags:    

Similar News