உள்ளூர் செய்திகள்
“குளத்தை காணவில்லை” என போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்
வலங்கைமான் அருகே “குளத்தை காணவில்லை” என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தில் மொத்தம் 7 குளங்கள் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரே கையொப்பமிட்டு சான்றும் அளித்துள்ளார். இந்நிலையில் சந்திர–சேகரபுரம் ஊராட்சியின் கட்டு–ப்பாட்டில் 6 குளங்கள் மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
குளம் உள்ளிட்ட விவசாய நிலப்பரப்பை இதே கிராமத்தைச் சேர்ந்த பருவதம்மாள் என்பவர் நிர்வகித்து வந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்திர–சேகரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் கேட்டபோது இக்கிராமத்தில் ஊராட்சி கட்டுப்பாட்டில் 7குளங்கள் இருந்ததற்கான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கும் நிலையில், அகத்தீஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருந்த குளம் தூர்க்கப்பட்டு தற்போது வாழைத்தோப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி–களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் அந்த புகார் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரபுரம் கிராம மக்கள் திடீரென வலங்கை–மான் பகுதி முழுவதும் குளத்தை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.
இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குளத்தை கண்டுபிடித்து மீட்க வேண்டும் மீண்டும் குளம் இருந்த பகுதியில் தூர்வாரி குளத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.