செய்திகள்
சமையல் எண்ணை தேவையை பூர்த்தி செய்ய எண்ணை வித்து சாகுபடியை அதிகரிக்க வேண்டும் - வேளாண் ஆலோசகர்கள் அறிவுறுத்தல்
சமையல் எண்ணை இறக்குமதியை குறைப்பதன் மூலம் பெருமளவு அன்னிய செலாவணி மிச்சமாகும்.
திருப்பூர்:
ஊரடங்கு காலத்தில் பிற தொழில்கள் நசிந்தாலும்கூட வேளாண் தொழில் வளர்ச்சியடைந்தது. உணவு தானிய உற்பத்தி சிறப்பாக இருந்தது.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு அக்டோபர் வரையிலான பயிர் ஆண்டில் நாட்டின் சமையல் எண்ணை உற்பத்தி 83.18 லட்சம் டன் எண்ணை வித்து சாதனை சாகுபடியை நாடு பெற்றது.
ஆனாலும் இதில் பெருமைப்பட முடியவில்லை. காரணம் சமையல் எண்ணை இறக்குமதி 131 லட்சம் டன்னாக உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு அளவு இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
ஆண்டுதோறும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறோம். சமையல் எண்ணை இறக்குமதியை குறைப்பதன் மூலம் பெருமளவு அன்னிய செலாவணி மிச்சமாகும்.
நாட்டில் எரிபொருளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ? அதைபோன்றுதான் சமையல் எண்ணைக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதும் யதார்த்தம்.
நாட்டில் பெருமளவு பாமாயில் இறக்குமதியாகிறது. நம் நாட்டில் எள், தேங்காய், சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துகள் பயிரிடப்படுகின்றன. இவற்றை அந்தந்த மாநில த்தின் உற்பத்திக்கேற்ப பாரம்பரியமாக பயன்படுத்துவோர் அதிகம்.
ஒரு காலத்தில் எண்ணை மொத்த தேவையில் 97 சதவீதம் வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்த நிலை இருந்தது. பாரம்பரிய எண்ணை வித்து சாகுபடியை அதிகரிப்பதன் மூலம் இயற்கை வளம் அழிக்கப்படாது. பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆதாரம் அழிக்கப்படாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எண்ணை வித்து சாகுபடிக்கு உரிய ஊக்கம் தரப்பட வேண்டும். இதன் மூலம் சாகுபடி பரப்பை அதிகரிப்பதும் சமையல் எண்ணை இறக்குமதியை ஓரளவு குறைக்கவும் முடியும் என்கின்றனர் திருப்பூர் மாவட்ட வேளாண்மை ஆலோசகர்கள்.