பண்ருட்டி பகுதியில் விடிய விடிய மழை- மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பண்ருட்டி:
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வானமே பிளந்து ஊற்றுவது போல் மழை பொழிந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மழையுடன் காற்றும் வேகமாக வீசியதால் ஒரு சில இடங்களில் மின்கம் பிகள் அறுந்து விழுந்தது.
பண்ருட்டி பகுதியை சேர்ந்த சித்தரசூரை சேர்ந்த விவசாயி அமலநாதன் இன்று காலை தனது வயலுக்கு சென்றார். அப்போது லேசான மழை பெய்தபடி இருந்தது. குடை பிடித்தபடி சென்ற அவர் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் அமலநாதன் சம்பவ இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.