செய்திகள்
திருப்பூரில் பள்ளியின் பூட்டை உடைத்து மடிக்கணினி திருட்டு
திருப்பூரில் பள்ளியின் பூட்டை உடைத்து மடிக்கணினி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
பெருமாநல்லூர் தட்டான்குட்டை சேர்ந்தவர் மலர்விழி (வயது 50). இவர் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு வந்து விட்டு வீடு திரும்பினார். நேற்று முன்தினம் காலை மீண்டும் பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியில் அவரது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மடிக்கணினி, ஸ்பீக்கர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.