செய்திகள்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்தவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2021-04-11 21:29 GMT   |   Update On 2021-04-11 21:29 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் 190 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. தற்போது கூடுதலாக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைக்கும் தினமும் ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்து கொண்டிருக்கிறார்கள்.



இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, டாக்டர்களும், நர்சுகளும் பணியில் இருந்து வருகிறார்கள். தற்போது கூடுதல் படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு தொய்வின்றி சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இதுபோல் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News